அண்ணல் அம்பேத்கருக்கு காவி சாயம் பூசிய இந்து முன்னணி!

மதச்சார்பற்ற, சாதிய ஒடுக்குமுறைகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவுக்கு விதையிட்ட அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலமாக சமப்படுத்திய சமூக போராளியாக அம்பேத்கர் பார்க்கப்படுகிறார்.

மகர் சமூகத்தில் பிறந்து, இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், கல்வி மறுக்கப்பட்டபோதும், அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, மூன்று லட்சம் பேரோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பௌத்தத்தைத் தழுவினார்.

இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, அவரது புகைப்படத்துக்கு காவி சட்டை அணிவித்து, திருநீறு பட்டை, குங்கும் பொட்டு வைத்த உருவத்துடன் சித்தரித்து இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், “காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தன் வாழ்நாள் முழுவதும் சாதி இந்துக்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, இந்து மதத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வர்ணாசிரம கோட்பாடுகளை எதிர்த்த அம்பேத்கரை, அண்மைகாலமாக இந்துத்துவ அமைப்புகள் உரிமை கொண்டாடி வருகின்றன. பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசும் வழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பழந்தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், வரலாற்றுச்சிறப்பு மிக்கவர்களுக்குக் காவி சாயம் பூசுவது வழக்கம் தொடர்ந்து வருகிறது. புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சடிக்கப்பட்டது தொடங்கி, திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு பூசி, கழுத்தில் ருத்திராஷ்டிர மாலை அணிந்து அவருக்கு காவி சாயம் பூசியது வரை காவி சாயம் பூசப்படுவதற்கும், அவர்களுக்கு மத சாயம் பூசப்படுவதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது அம்பேத்கருக்கு இந்து முன்னணியினர் காவி சாயம் பூசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சியினரின் இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும் என காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. அம்பேத்கரை காவிமயமாக்கி இழிவுபடுத்தும் இந்து மக்கள் கட்சியினருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.