தாவணகெரேயில், வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா பீர்கொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருடைய கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது. இதனால், கணவர் இறந்த பிறகு மூதாட்டி அந்தப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி மூதாட்டி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதேபகுதியைச் சேர்ந்த ரவி (30) என்பவர், மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவரை மூதாட்டி தடுக்க முயன்றுள்ளார். ஆனால், மூதாட்டியை சமையல் அறைக்கு இழுத்துச் சென்று, அவருடைய வாயை பொத்தி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த ரவி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து மூதாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒன்னாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், இதுகுறித்து ஒன்னாளி போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ரவியை தேடி வருகின்றனர்.