புதுமுகங்களின் நடிப்பில், இயக்குனர் பாஸ்கி T ராஜ் இயக்கத்தில் Basket Films & Creations தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “Hi 5”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய பாடகர் கானா பாலா, படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தை சிறப்பாக உருவாக்கிய குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றார். தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், ஒரு காலத்தில் உறவுகளை போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள், வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாரிசு படம் தெலுங்கில் தியேட்டர் கிடைக்க வில்லை என கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை என்றார்.
தயாரிப்பாளர் இயக்குநர் பாஸ்கி T ராஜ் பேசியதாவது, இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வது தான் இந்தப்படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம். படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என்றார். ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது, நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப்பழக்கம் இல்லாமல் வாழுங்கள்.
இந்தப்படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா அப்பாவை போற்ற வேண்டும். அம்மா அப்பாவை வணங்குபவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும். இந்த Hi 5 படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார். இயக்குநர் பேரரசு பேசியதாவது, சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது. ஆனால் வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம். முதுமைக்காலம் தான் நம் வாழ்வில் முக்கியமானது, நாம் அந்த காலகட்டத்தில் தான் நமக்கு பிடித்ததை செய்ய ஆசைப்பட்டு வாழுகிறோம். முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.