852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!! எதற்காக தெரியுமா ?

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மதுக்கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் மதுப்பிரியர்கள் இது தொடர்பாக அரசு கண்டுகொள்வதில்லை எனவும் ஆதங்கப்பட்டுக்கொள்கின்றனர்.

இதையடுத்து கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான 852 டாஸ்மாக் ஊழியர்களை இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ 4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடுக்கு துணைபோனதாக 1,970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாக 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.