புதுடெல்லி: மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாலா ராய் எழுப்பிய கேள்விக்கு மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அளித்த பதில்: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு (31.10.2022) வரையிலான ஐந்தாண்டு காலத் தில் 56 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி சிபிஐ பதிவு செய்த வழக்குகளில் தண்டனைப் பெற்றுத் தரும் விகிதம் கடந்த 2020-ல் 69.83 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் அது 67.56 சதவீதமாக குறைந்துள்ளது.
சிபிஐ வழக்குகளில் தண்டனை பெறும் விகிதம் 2019-ல் 69.19 சதவீதமாகவும், 2018-ல் 68 சதவீதமாகவும், 2017-ல் 66.90 சதவீதமாகவும் இருந்தன.
ஆந்திர மாநில எம்பி/எம்எல்ஏக்கள் மீதுதான் சிபிஐ அதிகபட்சமாக 10 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதிமுக, பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் மீது மொத்தம் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.