நாடு முழுவதும் நேற்று முன்தினம் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு புதிதாக சிலை வடிவமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை சார்பில் இவ்விழாவிற்கான அழைப்பிதழ் தலைமைச் செயலாளர் இறையன்புக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கும் அனுப்பப்பட்டது.
அதன் படி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் ஆளுநர் மற்றும் மத்திய இணை அமைச்சரின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் பெயரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பெயரும் இடம்பெறவில்லை. இது ஆளுநர் மாளிகையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயல் தவறுதலாக நடைபெற்றதா அல்லது வேண்டுமென்றே நடைபெற்றதா என்ற வகையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக உள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநரும், மத்திய இணை அமைச்சர் மட்டும் பேசிய நிலையில், தலைமைச் செயலாளரையும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரையும் பேச அழைக்காமல் தவிர்த்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.