அரசு அதிகாரி கார் மோதி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுஜாதா (30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது உணவு சாப்பிடுவதற்காக எதிர்புற சாலையில் உள்ள ஓட்டலுக்கு செல்ல சாலையை கடந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் இருந்து வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி பயணித்து வந்த அரசுக்கு சொந்தமான கார் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுஜாதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் 5 வயது குழந்தை மற்றும் சுரேஷ் ஆகியோர் காயமின்றியும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதையடுத்து இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.