நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:- “தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தபடி ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.420 கோடி நிதி ஒதுக்கி தற்போது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான டெண்டரும் விரைவில் விடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலமைச்சர் பேருந்தில் கட்டணம் உயர்வு கிடையாது என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
மினி பேருந்து உரிமையாளர்கள், முதலமைச்சரை சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். அதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கிறோம். விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.