மாண்டஸ் புயல்.. மாமல்லபுரத்தில் பேய் ஆட்டமா? புஸ்வானமா?

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இது நாளை மாலை அல்லது நாளை மறுநாள் காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் என, பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது, பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், மேலும் அதி தீவிர கன மழையும் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனாலும் கூட புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் கொண்டு சென்று தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு மும்முரமாக செய்து வருகிறது.

மேலும் 240 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் புதுச்சேரிக்கு விரைந்து வந்துள்ளனர்.

இவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து காலாப்பட்டு, கனக செட்டிக்குளம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடற்கரையோர கிராமங்களில் அபாயம் ஏற்படக் கூடிய பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மாண்டஸ் புயல் மற்றும் கனமழையின் போது கடல் சீற்றம் அதிகமாக ஏற்படுவதால் கரையோரம் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குவதற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாளை காலை வரை மாண்டஸ் புயல் தீவிர புயலாகவே இருந்து மெல்ல நகர்ந்து பிறகு சற்று வலு குறைந்து கரையை கடக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நாளை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் திருவள்ளூர், சென்னை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் தருமபுரி, சேலம், நாமக்கல்,திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கும் விஜயன் என்பவர் கூறுகையில், மாண்டஸ் புயல் மகாபலிபுரம் பகுதியில் கரையை கடக்க இருப்பதாக கூறப்படுவதால் கொஞ்சம் அச்சமாக தான் உள்ளது. ஆனாலும் தமிழக அரசு மற்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் எச்சரிக்கையை முறையாக பின்பற்றி வருகிறோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.