மேன்டூஸ் புயல் பாதிப்பு: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம்

சென்னை: மேன்டூஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது.

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயிண்ட் பின்பு மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த நவ.27ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் மேன்டூஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.