இமாச்சலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுக்கு அறிவிப்பு

சிம்லா,

68 இடங்களை கொண்டுள்ள இமாசலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

இமாசலபிரதேச மாநிலத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது. குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.

இங்கு 5 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது.

68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றிக்கனி பறித்துள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர்சிங் சுக்கு, மாநில முதல்-மந்திரியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்தின் முதல்-மந்திரியாக 58 வயதாகும் சுக்விந்தர்சிங் சுக்குவின் பெயரை தேர்வு செய்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை, முதல்-மந்திரியாக கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சுக்விந்தர்சிங் சுக்கு, கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் , சுக்விந்தர் சிங் முதல்-மந்திரியாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். நாளை காலை 11 மணிக்கு முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிஹோத்ரியும் நாளை பதவியேற்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.