ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக மக்களை கவர்ந்திருக்கும் பெரிய கோயிலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பெரிய நந்தி இருந்து வருகிறது. கோயிலுக்கு வருபவர்கள் நந்தியை தவறாமல் தரிசித்து செல்வார்கள். இந்த நிலையில் நந்தி சிலை மீது இரண்டு அடி நீளத்துக்கு ஏற்பட்டிருக்கும் விரிசல் பெரிய கோயில் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்த பிறகும் விண்ணோக்கி உயர்ந்திருக்கும் விமான கோபுரத்துடன் அழகுற காட்சி கொடுத்து கொண்டிருக்கிறது. உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் யுனெஸ்கோவால் அங்கீரிக்கப்பட்டிருக்கிறது.
உலகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலுக்கு வருகின்றனர். எந்த விதமான தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட அதன் கட்டுமானத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத அற்புதம் தஞ்சாவூர் பெரிய கோயில் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வரும் போது சிலாகித்து சொல்வதுண்டு.
தஞ்சாவூருக்கு பெரிய கோயில் அடையாளம் என்றால் கோயிலுக்கு பெருவுடையார் சன்னிதிக்கு எதிரே நந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் மகா நந்தி முக்கிய அடையாளம். ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் மாலை நேரத்தில் நந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியை தரிசிப்பது வழக்கம்.
இந்த நிலையில், பெரிய கோயில் நந்தியின் பின் பகுதியில் இரண்டு அடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கும் முன்பு பெரிய கோயில் குடமுழுக்க விழா நடைபெற்றது. அபோது கோயில் முழுவதும் புனரமைப்பு பணிகள் செய்யபட்டது. நந்தியும் புனரமைப்பு பணி செய்யப்பட்ட நிலையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கோயிலை சரிவர கவனிக்க தவறியதே நந்தி விரிசல் அடைந்திருப்பதுக்கு காரணம் என பெரியகோயில் மீது ஆர்வம் கொண்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிலரிடம் பேசினோம், “ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட பெரிய கோயில் தமிழர்களின் திறமைக்கும், கட்டடக்கலைக்கும் மிக சிறந்த எடுத்து காட்டாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டை கடந்த நிலையிலும் அதன் மீதிருக்கும் பிரமிப்பும், கோயில் அழகும் கொஞ்சமும் குறையவில்லை. பிரமிப்பூட்டும் கட்டுமானத்தால் உலக மக்களையே வசீகரித்து வருகிறது.
நாயக்கர் ஆட்சி காலத்தில் பெரிய கோயிலில் ஒரே கல்லில் உருவான நந்தி அமைக்கபட்டது. சுமார் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட நந்தி தஞ்சாவூர் பெரியகோயில் மீதான பிரமாண்டத்தை மக்களிடையே அதிகப்படுத்தியது. நந்தியின் மேல் பின் பகுதியில் இரண்டு அடிக்கு மேல் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பெரியகோயில் வழிபாட்டு முறை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், கோயில் கட்டங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நந்தியின் மேல் ஏற்பட்டிருக்கும் வெடிப்பு பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. கோயில் நிர்வாக தரப்பில் அந்த வெடிப்பு நீண்ட நாள்களாக இருப்பதாக கூறுகின்றனர். அதனை உடனே சரி செய்து பெரியகோயிலையும், நந்தியையும் பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து தொல்லியல்துறை தரப்பில் சில அதிகாரிகளிடம், “பெரிய கோயிலில் அடிக்கடி புனரமைப்பு பணிகள் செய்யபடுகிறது. பிரதோஷ நாள்களில் நந்தி மீது அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது நந்தி மீது பால், மஞ்சள் உள்ளிட்டவை ஊற்றப்படுகிறது. நந்தியை பாதுகாக்க அதன் மேல் பூசப்பட்டிருக்கும் முலாம் அபிஷேகத்தால் பெயர்ந்திருக்கிறது. நந்தி மேல் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவது தவறு. உடனடியாக புனரமைப்பு பணி செய்து அதனை சரி செய்து நந்தி பாதுகாக்கப்படும்’’ என்றனர்.
அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதாவிடம் பேசினோம், “நந்தி மீதுள்ள விரிசல் ஏற்கெனவே இருந்தது. தற்போது ஏற்பட்டது இல்லை. விரைவில் அது சரி செய்யப்படும்” என்றார்.