தமிழக அமைச்சரவையில் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுகிறார். அவருக்கான பதவியேற்பு நாளை காலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க மாட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உதயநிதி பதவியேற்பு
திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தமிழகம் முழுதவதும் திமுக வேட்பாளர்களுக்காக சுழன்றடித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என திமுக சீனியர்களே தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது அவருக்கு பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, நாளை காலை தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்கத் துறை பொறுப்பு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்வில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு ஜெயக்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜெயக்குமார் விளக்கம்
சென்னை மாநகர் காவல் அணையர் அலுவலகத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அஞ்சலி செலுத்துவதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பட்டம் சூட்ட தமிழக ஆளுநர் தேவைப்படுகிறார். ஆனால் மற்ற தேவைகளுக்கு ஆளுநர் தேவை இல்லையா?. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க மாட்டார்” எனத் தெரிவித்தார்.