மழை, மக்கள் நல்வாழ்வு வேண்டி இருக்கன்குடி மாரியம்மனுக்கு சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆன்மிகத் தலங்களில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில், கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவார தினத்தையொட்டி அம்மனுக்கு சங்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

சங்காபிஷேகம்

கார்த்திகை கடைசி சோமவார தினத்தையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நெல்லையைச் சேர்ந்த ஓதுவார் குழுவினர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மக்கள் நல்வாழ்விற்காகவும் சிறப்பு மகாஹோமம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்குப் பால், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், திருமஞ்சனப் பொடி, விபூதி உள்ளிட்ட 18 வகையான திவ்ய பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான‌ பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து பக்திப் பரவசமடைந்தனர்.

அம்மன்

தொடர்ந்து ‘ஓம் சக்தி’ எனும் பெயர் வடிவில் பூக்கள் மற்றும் 1,008 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மேளதாளம் முழங்க புனிதத்தீர்த்தம் நிரம்பிய 1,008 சங்குகளால் அம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டும், அம்மன் புகழ்பாடியும் சாமி தரிசனம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.