நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஓராண்டுக்கு பின் மேலும் 3 இடைத்தரகர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் முதற்கட்டமாக மாணவர் உதித் சூர்யா அவரது தந்தையான அரசு மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் மருத்துவ மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், ரிஷிகாந்த், பவித்ரன், மாணவி – பிரியங்கா, மற்றும் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகம்மது சபி, மாதவன், ரவிச்சந்திரன், மைனாவதி என 14 பேரை கைது செய்தனர்.
இவர்களுக்கு உதவிய இடைத்தரகர்கள் மனோகரன், ஆறுமுகம், வேதாச்சலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாமாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆக நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 18 பேர் கைதாகி பின் நீதிமன்ற ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஓராண்டுக்கு பின் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்கள் மூவரை தேனி சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாணவர் இர்பானுக்கு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதற்கு உதவியதாக பெங்களூரில் வசித்து வந்த பீகார் பொறியியல் பட்டதாரி கிருஷ்ணா முராரியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கைது செய்த சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சாஹத்குமார் சிம்ஹா, ரகுவந்த் மணி பாண்டே ஆகிய இருவரையும் பெங்களூரில் கைது செய்து தேனியில் விசாரணை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின் மூவரையும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் மூவரையும் 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
newstm.in