“ `வாரிசு’ படத்தை வெளியிடாமல் செய்த `வாரிசு'க்குத்தான் பட்டாபிஷேகம் செய்கிறார்கள்!"- கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் நகர அ.தி.மு.க சார்பில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையில், கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க  தி.மு.க தாயாராக உள்ளதா?  தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் செய்வேன் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். அதைப்போல பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை சொல்லாமலே உயர்த்தினார். அதேபோல, உதயநிதிக்கு அமைச்சர் பதவி எனச் சொல்லாமல் செய்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க  உள்ளதால்  மூத்த அமைச்சர்கள் பொருமலில் உள்ளனர். உதயநிதி அமைச்சராக பதவி ஏற்ற நாளிலிருந்து தி.மு.க-வுக்கு கேடு காலம்தான். தற்போது வரை மொத்த சினிமாவையும் திரைக்குப் பின்னால் தங்கள் கையில் வைத்திருந்தனர். இனிமேல் நேரடியாக தாங்களே வைத்துக் கொள்வார்கள். சினிமா துறையை அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். முதல்வரின் வாரிசுதான் ’வாரிசு’ படத்தை வெளியிட விடாமல் செய்கிறார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அந்த வாரிசுக்குதான் பட்டாபிஷேகம்  செய்யவிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தின் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ளும் அவசியம் அ.தி.மு.க-வுக்குக் கிடையாது. ஆட்சியை தி.மு.க அரசு முழுமையாக ஆண்டால்தான் இந்த ஆட்சியின் மூலம் பட்ட துன்பங்களை மக்கள் அறிந்து கொள்வார்கள். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க-வை வரவேற்பார்கள். தி.மு.க ஆட்சியில் தற்போது மக்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.