கடல் வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (என்சிபி)பெறப்பட்ட புள்ளிவிவர தகவல்களின் அடிப்படையில், கோகைன், ஹெராயின் மற்றும் ஹஸ்கிஸ் போன்ற போதை மருந்துகளின் கணிசமான பகுதி இந்தியாவுக்குள் கடல் வழியாகவே கடத்தி வரப்படுகின்றன. போதைப் பொருட்கள் பெருமளவு பிடிபடும் நிலையிலும், ஆண்டுக்காண்டு அவற்றின் சதவீதம் மாறுபட்ட அளவில் உள்ளது.

நடப்பாண்டில் நவம்பர் 30 வரையில், மொத்தம் 3,017 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், இதில்கடல்வழியாக பிடிபட்ட ஹெராயின் அளவு மட்டும் 1,664 கிலோவாக (55%) இருந்தது. அதேபோன்று, ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட 122 கிலோ கோகைனில் 103 கிலோ (84%) கடல் வழியாக கடத்தி வரப்பட்டு பிடிபட்டுள்ளது.

மேலும், பிடிபட்ட ஹஸ்கிஸ்மற்றும் ஏடிஎஸ் போதைப்பொருட்களில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட இவற்றின் அளவு முறையே 23 மற்றும் 30 சதவீதமாக இருந்தன. போதைப் பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசின் பல்வேறு சட்ட அமலாக்க முகமைகள் மாநில காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.