இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷ்ரம் ரங்’ சமீபத்தில் வெளியானது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
அதற்கு காரணம் தீபிகா படுகோனேவின் காவி நிற உடை. அந்தக் காட்சிகளை பார்த்த இந்துத்துவா சிந்தனையுடையவர்கள் காவி நிறத்தில் எப்படி தீபிகா படுகோனே கவர்ச்சியில் இருக்கலாம் என்ற எதிர்ப்பை சமூக வலைதளங்களில் எழுப்பினர். தற்போது இந்த எதிர்ப்பு அரசியல் அரங்கிற்கு சென்றிக்கிறது.
தீபிகாவின் உடை குறித்து பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ‘பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும்.
இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்’ என்றார். தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.