மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில், நாட்டில் மின்சார வாகனங்களுக்கு மாறுவது மற்றும் உற்பத்தி செய்வது என்ற எஃப்.ஏ.எம்.இ. என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் கிருஷன்பால் குஜார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது:
“எஃப்.ஏ.எம்.இ திட்டத்தில் இரண்டாவது கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் மொத்தம் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் மொத்தம் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
இதில் தமிழகத்தில் மொத்தம் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுச்சேரி மாநிலத்தில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். நாட்டிலேயே அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது” என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.