தொழில்துறை, பொருளாதாரத்தில் சரிவு இப்போது பப்பு யார்? சொல்லுங்க… சொல்லுங்க… ஒன்றிய அரசுக்கு திரிணாமுல் எம்பி கேள்வி

புதுடெல்லி: தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சுட்டிக்காட்டி, ‘இப்போது யார் பப்பு” என்று சொல்லுங்கள் என்று ஒன்றிய அரசுக்கு திரிணாமுல் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் நேற்று 2022-23ம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், ‘இந்த ஆளும் அரசு, பப்பு என்ற வார்த்தையை உருவாக்கியது. நீங்கள் அதை இழிவுபடுத்தவும், தீவிர திறமையின்மையைக் குறிக்கவும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் எங்களிடம் கூறுகின்றன. உண்மையான பப்பு யார்?. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி தவறான தகவல்களை மோடி அரசாங்கம் பரப்புகிறது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளில், ‘அக்டோபரில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி நான்கு சதவீதம் குறைந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அந்நிய செலாவணி இருப்பு ஒரு வருடத்தில் 72 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. 2014 முதல் கடந்த 9 ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின் கீழ் இந்திய குடியுரிமையை துறந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையை 12.5 லட்சத்திற்கும் அதிகமாகும். இது நாட்டில் ஆரோக்கியமான பொருளாதார சூழலின் அடையாளமா அல்லது ஆரோக்கியமான வரிச்சூழலா? இப்போது யார் பப்பு?’ என்று கேள்வி எழுப்பினார். தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், ‘இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி தேக்கமடைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத நிலையில் இருந்த நேரத்தில், வலுவான பொருளாதாரம் பற்றி அரசாங்கம் பேசிக்கொண்டே இருந்தது’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.