`அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டது!’ – 50 வயது தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்

தன் 50 வயது தாய்க்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், பலரின் பாராட்டை பெற்றுள்ளது. திருமணத்தால் தன் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டதாக, மகள் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் தீபார்த்தி ரியா சக்கரவர்த்தி. இவரது குடும்பம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வசித்து வந்தது. இவர் இரண்டு வயதாக இருந்தபோதே, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் தனது தந்தையை பறிகொடுத்தார். அப்போது அவரின் தாய் மோசுமிக்கு வயது 25.

திருமணம்

இதனிடையே, குடும்ப உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் மோசுமி, மகள் தீபார்த்தி சக்கரவர்த்தியை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றார். அங்கு பாட்டி, தாயின் அரவணைப்பில் தீபார்த்தி வளர்த்து வந்தார். விவரம் புரியத் தொடங்கியதும் தன் அம்மா பட்ட கஷ்டங்களை எண்ணி தீபார்த்தி கவலையடைந்தார். மேலும், தனிமை தன் அம்மாவின் மனதை பாதித்து வருவதை உணர்ந்து, அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், மகளின் எதிர்காலம் கருதி, இதனை அவர் ஏற்கவில்லை.

இந்த நிலையில், மகளின் தொடர் வற்புறுத்தலை அடுத்து திருமணம் செய்துகொள்ள மோசுமி சம்மதித்தார். கடந்த மார்ச் மாதத்தில் மோசுமி தனது 50வது வயதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வபான் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். ஸ்வபானுக்கும் வயது 50 தான் ஆகிறது; இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த தகவல்களை, மகள் தீபார்த்தி தனது சமூகவலைதளப் பதிவில் மகிழ்வோடு பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என் அம்மா தனிமையில் இருந்ததை எண்ணி பல நாள்கள் வருத்தப்பட்டதுண்டு. மறுமணம் செய்து கொள்ளும்படி பலமுறை அவரிடம் கேட்டுக் கொண்டும் மறுத்து வந்தார். அதற்காக பல முறை அவரது மனதை மாற்ற முயற்சித்திருக்கிறேன். இறுதியில் ஒருவழியாக சம்மதித்தார். இப்போது என் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டது. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.