மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு: நேரு ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில், பள்ளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு என்றும்,  விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணி இருக்கும் என கூறினார்.

இந்தியாவிலுள்ள ஆதிவாசி (பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்) மக்களுக்கான உண்டி உறைவிடப் பள்ளித் திட்டம் ஏகலைவா திடட்ம் ஆகும். நகரங்களைவிட்டு தொலைவில் வசிக்கும் ஆதிவாசி மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க இந்தியாவின் பழங்குடியினர் அமைச்சகத்தால் இத்திட்டம் 1997-98 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் சார்பிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாணவ மாணவிகளுடன் நேரு ஸ்டேடியத்தில், அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று காலை நேரில் சந்தித்து கலந்துரை யாடினார்.  இந்த சந்திப்பின் போது, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி,   நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினேன். அவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினேன். மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதலின் பேரில் எனது பணிகளை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கொடுத்துள்ளனர். அதை திறம்பட நிர்வகிப்பேன்.

திமுக தேர்தல் அறிக்கையில் 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதை நிறைவேற்றுவதே எனது முதல் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணிகள் இருக்கும்.

‘முதலமைச்சர் தங்கப் கோப்பை’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை சேர்த்து முதலமைச்சர் தங்கப் கோப்பைக்கான போட்டிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது.

‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம். ஏடிபி டென்னிஸ் போட்டியும் கொண்டு வருவதற்கான முயற்சியும் எடுத்து வருகிறோம்.

மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறார்கள். அவர்களுடன் நாங்களும் ஒருங்கிணைந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.