உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டங்களில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் விழுந்தன.
இதையடுத்து தென்னக ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவையை 16ஆம் தேதி வரை ரத்து செய்தது. ஆனால் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முடியதாதால், ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டது.
அதன்படி 18ஆம் தேதி வரை உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியது.
இந்நிலையில் தண்டவாளத்தில் கிடந்த பாறைகள், மண் அகற்றப்பட்டதால், இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
newstm.in