ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என 57.5 சதவீதம் பேர் வாக்களித்திருந்த நிலையில், எப்போது விலகுவேன் என்பது குறித்து எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் பிரபல ட்விட்டர் நிறுவனத்தை 3.6 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தார். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு, கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை அவர் கையகப்படுத்தினார். அன்று முதல், ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். இதனால், சர்வதேச அளவில் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
சமீபத்தில், தன்னைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி வந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய எலான் மஸ்க் கடும் எதிர்ப்புக்கு பின் அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த சூழலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக ட்விட்டர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து நான் விலக வேண்டுமா? என எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்துக் கணிப்பு கேள்வி ஒன்றை வெளியிட்டார். இதில், 1.70 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாக்களித்தனர். இதில் 57.5 சதவீதம் பேர் ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என வாக்களித்தனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவு குறித்து எலான் மஸ்க் தரப்பில் எந்த பதிலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க் இன்று ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இந்த வேலைக்கு முட்டாள்தனம் மிகுந்த ஒருவரை நான் கண்டுபிடித்த உடன் ட்விட்டர் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். அதன் பின்னர், மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே நான் தலைமை பொறுப்பை வகிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.