சியோல்: எல்லைத் தாண்டி வந்த வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “திங்கட்கிழமை வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள் தென்கொரிய எல்லையைக் கடந்தன. அவற்றை நாங்கள் சுட்டு விழ்த்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், தென் கொரிய வான்வெளி எல்லையில் நுழைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்தான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா இரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த நிலையில், வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், தென்கொரிய எல்லையில் நுழைந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தென்கொரியாவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின் வலியுறுத்தல்படி வடகொரியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில், வட கொரியாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க தென் கொரியாவும் தயாராகி வருகின்றது. இதுதொடர்பாக தென்கொரியாவும் சில நாட்களுக்கு முன்னர் அறிக்கைவிட்டிருந்தது. இதனை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா என வடகொரியா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.