"விஜய் என்ன பண்றாருன்னு எங்களுக்கே தெரியாது…" – ஷோபா சந்திரசேகர் விளக்கம்

விஜய் நடிப்பில் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதன் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் நடைபெற்றிருந்தது. விஜய்யின் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சந்திரசேகர் மற்றும் ஷோபா, இந்த விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

ஷோபா சந்திரசேகர்

விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர், விஜய்யின் பெயரில் கட்சியைப் பதிவு செய்ததிலிருந்து விஜய்க்கும் சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தின் செயல்பாடுகள் சரியில்லை, அது விஜய்க்கு எதிராக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தும் வந்தார் சந்திரசேகர். அண்மையில்கூட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டது. அப்போது சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவர் மட்டும் இருக்கும் புகைப்படம், வீடியோ வெளியாகி விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் விஜய்யின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லாரும் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன். காமாட்சி அம்மனின் தரிசனம் பார்த்தேன். விஜய் படம் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கங்க எல்லாரும்” என்றார்.

மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “விஜய் எந்தப் படத்தில் எப்போது நடிக்கிறார், எப்படி நடிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. முதலில் இந்தப் படத்தில் (வாரிசு) அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றே எனக்குத் தெரியாது, இதில் அடுத்த படத்தில் என்னவாக நடிக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும். இந்தப் படம் (வாரிசு) ஃபேமிலி சப்ஜெக்ட் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும்” என்றவரிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஷோபா சந்திரசேகர், “அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.