சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் சீனிவாசன் (20). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பளித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், குற்றவாளி சீனிவாசனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.