1000 கிலோ எடையில் ராட்சத திருக்கை மீன்… ரூ.61000 க்கு விலை போனது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இது தவிர 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் அதிகமாக கிடைக்கும்.

மீன் ஏலக்கூடத்தில் வைக்கப்பட்ட திருக்கை மீன்

பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பிவிடும். இந்த சிறு படகுகளில் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் அதிகமாக கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் ஒரு படகு நேற்று கரை திரும்பியது.

அந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட திருக்கை மீனை முழுதாக கரையில் இறக்கி வைக்க மீனவர்களால் முடியவில்லை. இதையடுத்து அந்த மீனை 8 துண்டுகளாக அறுத்த மீனவர்கள் அவற்றை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம்விடும் கூடத்துக்கு கொண்டு வந்தனர். ஏலக்கூடத்தில் வியாபாரிகள் மத்தியில் மீன் ஏலம் விடப்பட்டது.

8 துண்டுகளாக வெட்டப்பட்ட திருக்கை மீன் ஏலம் விடப்பட்டது

திருக்கை மீனை வாங்கும் ஆர்வத்துடன் ஏலத்தில் வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஏல முடிவில் அந்த மீன் 61000 ரூபாய்க்கு விலை போனது. திருக்கை வகை மீன்களில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெரிய அளவிலான மீன்கள் எப்போதாவதுதான் சிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.