ரயிலில் டிக்கெட் எடுக்காத பயணி.. அடித்து உதைத்த பரிசோதகர்கள் – வீடியோ உள்ளே!

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த நபரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை – ஜெயின் நகர் சென்று கொண்டிருந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர். தோலி என்ற ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, ரயில் பெட்டியில் மேல் இருக்கையில் இருந்த பயணியிடம் டிக்கெட் கேட்டனர். அந்த பயணியிடம் டிக்கெட் இல்லை எனத் தெரிகிறது.

இதனால், அந்தப் பயணியை கீழே இறங்குமாறு டிக்கெட் பரிசோதகர்களில் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அவர் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் பயணியை கீழே இழுத்துத் தள்ளினார். உடன் இருந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகரும் சேர்ந்து பயணியின் முகத்தில் உதைத்து கடுமையாக தாக்கினர். இதில் பயணி படுகாயம் அடைந்தார்.

இதனை அருகில் இருந்த மற்றொரு பயணி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் சக பயணிகள் அடிக்க வேண்டாம் என தடுத்தும், டிக்கெட் இல்லாத பயணியின் முகத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கடுமையாக அடித்து உதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த 2 ஆம் தேதி இரவு நடந்துள்ளது.

இதற்கிடையே, ரயில் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.