ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஏழுமலையான் தரிசன டிக்கெட் 9ம் தேதி வெளியீடு

திருமலை: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருப்பதியில் தரிசனம் செய்ய ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், பிப்ரவரி மாதமும் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் 9ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் ‘https://tirupatibalaji.ap.gov.in/#/login’ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

₹4.53 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ம் தேதி முதல் வரும் 11ம் தேதி வரை, வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 45,887 பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 17,702 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ₹4.53 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.