பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த பாரத் ஜோடோ யாத்திரை நடக்கவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

“பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை,” என, காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை கடந்து, தற்போது பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், ஹரியானா மாநிலம் கர்னலில், இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ராகுல் காந்தியை 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஒற்றுமைப் பயணம் முன்னெடுக்கப்படவில்லை,” என தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்த முன்னெடுக்கப்படவில்லை. ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் சித்தாந்த ரீதியிலான நடைப்பயணம். இது ஒருவரின் தனிப்பட்ட நடைப்பயணம் அல்ல. இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் பொருளாதார சமத்துவமின்மை, சமூகத்தை பிளவுப்படுத்துதல் மற்றும் அரசியல் சர்வாதிகாரம் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.