பீகாரில் முதற்கட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது: மதம், சாதி, உட்பிரிவு போன்ற தரவுகள் சேகரிப்பு

பீகார்: பீகார் மாநிலத்தில் இன்று முதல் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதை அடுத்து பிகாரில் உள்ள அனைத்து மக்களின் சாதி மற்றும் உட்பிரிவுகளை இந்த ஆண்டு மே மாதத்துக்குள் ஆவணப்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் இதற்காக நிதீஷ்குமார் அரசு ரூ.500 கோடி ஒதுக்கி இருக்கிறது. முதல் கட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக கணக்கெடுப்பாளர்களுக்கு ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

முதல் கணக்கெடுப்பில் வீடுகளின் எண்ணிக்கையும், இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதம், சாதி, உட்பிரிவுகள் மற்றும் பொருளாதார நிலை தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் நிலையை கருத்தில் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்படும் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் முதல் மாநிலம் பீகார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.