புத்தகங்களாக வெளியான லோகேஷ் கனகராஜ் படங்களின் திரைக்கதைகள் – எங்கே கிடைக்கும்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 4 படங்களின் திரைக்கதை புத்தக வடிவில், தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த புத்தகக் கண்காட்சி, வரும் 22-ம் தேதி வரை, கிட்டத்தட்ட 17 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகியப் படங்களின் திரைக்கதை, தமிழில் புத்தகங்களாக வெளியிடப்படுகிறது. பேசாமொழி பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பியூர் சினிமா அரங்கில் நாளை முதல் விற்பனைக்கு வர உள்ளது.

image

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குநராகவும், பெரும் எதிர்பார்ப்புடனும் இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுத்த 4 படங்களுமே மாஸ் ஹிட்டானநிலையில், சினிமாவில் சாதிக்க விரும்பும் இளம் இயக்குநர்களுக்கு இந்தப் புத்தகங்கள் உதவிக்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதையும் புத்தக வடிவில், சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.