கொரோனா பெருந்தொற்று காலத்தில் செவிலியர்களின் பற்றாக்குறை காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் தமிழக அரசால் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதி உடன் இவர்களின் ஒப்பந்த பணி காலம் முடிவடைந்த நிலையில், பணிக்காலம் நீட்டிக்கப்பட திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து, கடந்த ஏழு நாட்களாக ஒப்பந்த செவிலியர்கள் தங்களுக்கு நீதி கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவிலியர்களின் போராட்டத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவே, ஒப்பந்த செவிலியர்களை அழைத்து, இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை.
ஒப்பந்தம் அடிப்படையில் மீண்டும் பணியும், 18 ஆயிரம் ரூபாயாக சம்பள உயர்வும் வழங்க முடிவு செய்துல்லாம். இதுகுறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமைச்சருடன் சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்ட குழு அறிவித்துள்ளனர்.