முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி: வரும் 12ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன. ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் வரும் 12ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் இந்திய விமானப்படையின் 4 சு-20 எம்கேஐ ஜெட் விமானங்களும், 2 சி-17 விமானங்களும் ஒரு ஐஎல்-78 விமானமும், ஜப்பான் சார்பில் 4 எப்-2 மற்றும் 4 எப்-15 போர் விமானங்களும் பங்கேற்கின்றன.

இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதில் அடுத்தகட்ட நடவடிக்கை என இந்திய விமானப்படை கூறி உள்ளது. இப்பயிற்சியில் இருதரப்பு நிபுணர்களும் பல்வேறு அம்சங்களில் தங்களின் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா, ஜப்பான் பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் விதமாக இந்த விமானப்படை பயிற்சி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.