சபரிமலை ஐயப்பன் சன்னதியில் ஓய்வு பெற்ற பேராசிரியையின் சலங்கை ஒலி -மெய் சிலிர்த்த பக்தர்கள்

சபரிமலை சன்னதியில் 60 வயது ஓய்வு பெற்ற பேராசிரியையின்  பாரம்பரியமிக்க பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் சுதியும் லயமும் சேர்ந்த சலங்கை ஒலி நாட்டியம் கண்டு மெய் சிலிர்த்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கரிக்கோடு பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி விஜயலட்சுமி. 60 வயது நிரம்பிய இவர் கொல்லம் டி.கே.எம். பொறியியல் கல்லூரியின் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியை ஆவார். இளமையிலேயே முறைப்படி பரதநாட்டியம் கற்ற காயத்ரி விஜயலட்சுமி, குடும்ப சூழல் காரணமாக தனது 26ஆம் வயதில் தனது பரதநாட்டியத்தை முழுமையாக கைவிட்டார்.

26 ஆண்டுகள் காலில் சதங்கை அணியாத காயத்ரி விஜயலட்சுமி,  கொல்லம் மிதிலா டான்ஸ் அகாடமியில் தனது குருவான  மைதிலியன் அறிவுரையின் பேரில் மீண்டும்  நடனப் பயிற்சி பெற்றார். இதையடுத்து 2015ம் ஆண்டு சபரிமலையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னான முதல் நாட்டிய அரங்கேற்றத்தை தனது 52 ஆம் வயதில் நிகழ்த்தினார்.

image
தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் தற்போது போது இரண்டாவது முறையாக சபரிமலை சன்னிதானத்தில் தனது 60வது வயதில் நூறாவது நாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றி இருக்கிறார் காயத்ரி விஜயலட்சுமி. காயத்ரி தனது பரத நாட்டியத்தை பாபநாசம் சிவன் இயற்றிய ‘மகாகணபதி’ என்ற விநாயகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர் சிவபெருமானின் இயற்கையையும் அழகையும் போற்றியும் முருகஸ்துதி, தேவிஸ்துதி, ஸ்ரீபத்மநாப ஸ்துதி மற்றும்  ஐயப்ப ஸ்துதியை காயத்ரி விஜயலக்ஷ்மி அபிநயத்தால் அசத்தினார். திரளான ஐயப்ப பக்தர்கள் சுதியும் லயமும் சேர்ந்த 60 வயது பேராசிரியையின் சலங்கை ஒலி நாட்டியம் கண்டு மெய் சிலிர்த்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.