தமிழகத்தில் மேலும் ஆறு நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது ஜியோ நிறுவனம். இதற்கான சேவையை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
ஜியோ நிறுவனம், தமிழகத்தில் தலைநகர் சென்னையில் ஏற்கனவே 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர், வேலூர் ஆகிய முக்கிய ஆறு நகரங்களிலும், இந்த நிறுவனம் 5ஜி சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 5ஜி சேவையைக் கொண்டு வர 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 1 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், உலக அளவில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடிய அளவில் 25 லட்சம் இளைஞர்களை உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.