இன்று தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஓசூரில் நவீன வசதியுடன் கூடிய வர்த்தக மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் எழுதிய கேள்விக்கு பதில் அளித்த அவர் “சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் குமார் சொல்லி இருப்பது நல்ல கருத்து தான். ஓசூர் நகரம் ஒரு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் வேகமாக வளரும் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது ஓசூர் அளவிற்கு வேறு எந்த நகரமும் வர முடியாத அளவில் உலகளாவிய முக்கிய நகரமாக மாறி வருகிறது. ஓசூரின் புவியியல் அமைப்பு, தொழில் சூழல், அருகில் அமைந்துள்ள பெங்களூரு போன்ற நகரங்கள் உடைய தொடர்பு, தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓசூர் மிகச்சிறந்த அளவில் ஒரு தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் ஓசூர் நகரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்யும். சட்டமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியதைப் போல ஓசூர் நகரில் அமையக்கூடிய வர்த்தக மையம் எல்லாவிதமான வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். தற்பொழுது இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய ஒரு நவீன வர்த்தக மையமாக அமைவதற்கு தமிழக அரசு எல்லா வகையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.