தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது – சட்டத்தை திருத்தியது தமிழக அரசு

தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. குறிப்பாக அதிமுக ஆட்சியில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் டிஎன்பிஎஸ்சி எழுதும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியது.

அதற்கேற்ப, 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் எனும் வகையில் சட்டம் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறும் இளைஞர்களை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக இந்த சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.