பிலிப்பைன்சில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகம்

பிலிப்பைன்ஸ்,

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ.887) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம்.

ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ரஷ்யா-உக்ரைன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் பிலிப்பைன்சிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.