தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதேபோன்று திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் திருவாரூரில் உள்ள நத்தம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். அப்பொழுது காலணியுடன் பொங்கல் பானை வழிபாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
அதே போன்று இந்த வருடம் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் காலணியுடன் கலந்து கொண்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் வழியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் திமுக நிர்வாகிகளும் செருப்பு காலுடன் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 11:30 மணியளவில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திமுகவைச் சேர்ந்த வாலாஜா ஒன்றிய தலைவர் சேஷா வெங்கட்ராமன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் செருப்பு காலுடன் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் பானையை வழிபட்டனர்.
இதை பார்த்து முகம் சுளித்த பொதுமக்கள் தமிழ் தெரிந்த மாவட்ட ஆட்சியர் பூட்ஸ் காலுடனும், திமுகவைச் சேர்ந்தவர்கள் செருப்பு காலுடனும் பொங்கல் விழா கொண்டாடுவதுதான் திராவிட பொங்கல் விழாவா என கேள்வி எழுப்பினர். முதல்வர் மு.க ஸ்டாலினை போன்றே அவருக்கு கீழ் பணியாற்றும் அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் காலணி அணிந்து கொண்டு திராவிட மாடல் பொங்கல். இது தமிழர்களையும் தமிழர்களின் பண்பாட்டையும் அவ மதிக்கும் செயல் என ராணிப்பேட்டை மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.