கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி. கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே தவறி விழுந்து உயிரிழந்து விட்டார்.
இவர் மனைவி நந்தினி. இவர்களுக்கு பிரவீன் மற்றும் ஜெகநாதன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் நந்தினி வசித்து வந்தார்.
இந்நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த தாய் நந்தினி அவரை ஓசூர் மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து, குழந்தை மருத்துவமனையில் இருந்து வெளியான நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை உயிரிழந்தது.
அதன் பின்னர் அந்த குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது. இந்நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் இருப்பதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதாக நந்தினி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தெரிவித்ததாவது,
“கணவர் இறந்த பிறகு நந்தினி தனது இரண்டு குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதனால், நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். அதன் படி நான், கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.
அப்போது, குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததனால் ஆத்திரத்தில், பீர்பாட்டிலால் நான் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு மருத்துவமனையில், நந்தினி சேர்த்தாள்.
அங்கு குழந்தை படியிலிருந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி வெளியானது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த மாதம் 25-ந் தேதி காலை திடீரென உயிரிழந்து விட்டது.
உடனே குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் இரண்டு பேரும் புதைத்து விட்டோம். ஆனால், நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.