கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வர சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகம், ஆந்திர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இன்று நடைபெற்ற வார சந்தையில் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் மறிக்கை என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன.
இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தை தற்பொழுது வரை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள;பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகள் வாங்க குவிந்துள்ளனர். பொங்கல் சீசன் என்பதால் 15 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.15 ஆயிரம் முறை ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகள் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச் செல்வதால் வழக்கமாக 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆட்டுக்கறி இந்த ஆண்டு 1,000 ரூபாய் வரை விலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளனர். இன்று நடைபெறும் குந்திராப்பள்ளி வாரச்சந்தையில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக ரூபாய் 8 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும் என ஆடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.