மருத்துவர்கள் சொன்ன தகவலால் அதிர்ச்சி; மனஉளைச்சலில் குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர், கருங்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் கெட்டிச்செவியூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும், ரத்தினாள் என்கிற ரஞ்சிதம் (26) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியின் மகன் பெயர் இனியன். ஒன்றரை வயதாகும் மகன் இனியனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுவந்திருக்கிறது. இதனால், தம்பதி குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் குழந்தைக்குச் சற்று மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதன் காரணமாக ரஞ்சிதம் கடந்த சில நாள்களாகவே மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி, யாரிடமும் பேசாமல் இருந்துவந்திருக்கிறார்.

ரஞ்சிதம்

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தன்னுடைய குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய ரஞ்சிதம் எங்கேயோ சென்றுவிட்டது தெரியவந்தது. இது குறித்து ரஞ்சிதத்தின் கணவர் ஈஸ்வரமூர்த்தி குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று தேடிப் பார்த்திருக்கிறார். இந்த நிலையில், குருமந்தூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஈஸ்வரமூர்த்தி தேடிச் சென்றபோது வாய்க்கால் கரையில் ரஞ்சிதத்தின் காலணிகளும் உடைகளும் இருப்பதைக் கண்டு வாய்க்கால் பகுதியில் தேடிச் சென்றார். அப்போது குழந்தை இனியனின் சடலம் வெள்ளோடு அருகே வாய்க்காலில் மிதந்துகொண்டிருந்தது. அதையடுத்து, உடல் மீட்கப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ரஞ்சிதத்தின் பிரேதம் கோபி, சின்னக்குளம் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் மிதப்பதாக கோபி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் ரஞ்சிதத்தின் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், சம்பவ நாளில் ரஞ்சிதமும், குழந்தை இனியனும் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்துப் பேசிய கோபி போலீஸார், “மகன் இனியனுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதாகக் கேட்ட தகவலால் மன வருத்தத்தில் இருந்த ரஞ்சிதம், குழந்தையுடன் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும், குடும்பத் தகராறு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. ரஞ்சிதம், ஈஸ்வரமூர்த்திக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக கோபி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.