தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மற்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை விட மதுரையில் நடக்கும் இந்த மூன்று போட்டிகளுக்குதான் மவுஸ் அதிகம்.
அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளான நேற்று நடைபெற்று முடிந்தது. கரோனா கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்நிலையில், மாட்டு பொங்கல் பண்டிகையான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
பாலமேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்து வருகின்றனர். அதில், நடிகர் ஜான் கொக்கேனும், அவரது மனைவி நடிகை பூஜாவும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து வருகின்றனர். மலையாள நடிகரான ஜான், சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் விஐபி இருக்கையில் தனது குடும்பத்தினரோடு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமாக கண்டு ரசித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது,”தமிழ்நாடு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். மதுரையில் நான் அஜீத் சாருக்கு வில்லனாக நடித்த துணிவு திரைப்படத்தை மக்களோடு ரசித்து பார்த்தேன். மதுரை நகரம் அஜித் சாரின் கோட்டை.
அஜித் சார் ரசிகர்களோடு படம் பார்த்தது ரொம்ப சந்தோசமாக உள்ளது. அஜித் சார் இல்லனா நான் இல்லை. ஜல்லிக்கட்டு என்பது நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம். பாலமேடு ஜல்லிக்கட்டு பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நம் பாரம்பரியத்தை நாம் காக்க வேண்டும். இது நம் தமிழ்நாட்டின் பாரம்பரியம்” என்றார். துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.