ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புட்காம் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது ஒரு வாகனத்தை நிறுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றுள்ளனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அர்பாஸ் மிர், ஷாஹித் ஷேக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்துள்ள காஷ்மீர் கூடுதல் டிஜிபி விஜய்குமார், தேடப்பட்டு வந்த இவர்கள் இதற்கு முன் பாதுகாப்பு படை வசம் சிக்கியதாகவும் எனினும், தப்பி ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.