பதான் படத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் புதிய அறிவுறுத்தல்

பாலிவுட்டில் 2018ல் ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். முக்கியமான சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சிலர் இணைந்து பதான் படத்தின் மீதான கோரிக்கை ஒன்றை டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்திருந்தனர். அதில் பார்வையற்ற மற்றும் செவித்திறன் இழந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த படத்தை பார்த்து ரசிக்கும்படியாக இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டின்போது சப் டைட்டில்கள் மற்றும் ஆடியோ விவரங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த விஷயங்களை மேற்கொண்டு ஒடிடி தளத்தில் படத்தை வெளியிடுமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த மாற்றங்களை வரும் பிப்ரவரி 20-க்குள் செய்து சென்சாருக்கு மீண்டும் அனுப்பும்படியும் மார்ச் 20-க்குள் சென்சார் சான்றிதழ் வழங்கும்படியும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.