2 கவர்னருக்கு கட்டுப்படாத எடப்பாடி; பாஜ உச்சகட்ட டென்ஷன்; பகீர் முடிவு!

தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதன் தொடர்ச்சியாக எடப்பாடி மற்றும்
ஓபிஎஸ்
ஆகியோர் பதவியை இழந்தனர்.

இதன் பிறகு அதிமுக என்கிற மாபெரும் கட்சியை வழிநடத்துவது யார்? என்பதில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி திடீரென தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதில் டென்ஷனான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அதே சமயம் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி போட்டு குத்தாட்டம் போடுவதற்கு அதிமுக வலுவுடன் இருக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளது.

இதை மனதில் வைத்து
எடப்பாடி பழனிசாமி
, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை ஒன்றிணைத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியை தங்கள் கூட்டணியுடன் இணைத்து மாபெரும் சக்தியாக உருவெடுக்க திட்டம் தீட்டி வருகிறது.

இதன் காரணமாக, டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், பாஜக மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி எப்போதும் போலவே பாஜக தனது ஸ்டைலில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இறங்கிவிட்டது.

அவரும் தன்னுடைய ஸ்டைலில் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியாக ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அருகருகே அமர செய்து பார்த்தார்.

இருவருமே மருந்துக்கு கூட ஒருவர ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. இதனால் டென்ஷன் ஆன ஆளுநர் தமிழ்நாட்டு அரசியலில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, தமிழரும் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் இந்த விவகாரத்தை ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது ‘தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து’ என்று கூறி அதிமுகவில் நிலவும் அதிகார பிரச்சனையில் தன்னுடைய பஞ்சாயத்தை தொடங்கி உள்ளார்.

ஏற்கனவே, பாஜக மூத்த தலைவர்கள் நேரடியாக பேசி பார்த்தும் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வராததால், இந்த விவகாரத்தில் பாஜகவின் முகமாக இருந்து தீர்வு காண ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது ஆளுநர் ரவியும் முடிந்தவரை இறங்கி அடித்தும், எடப்பாடி பழனிச்சாமியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாததால், தமிழிசை சவுந்தரராஜன் கையில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் தமிழிசை சவுந்தராரஜனுக்கும் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்படாத சூழலில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவை வர செய்து அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜக திட்டம் தீட்டி உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தற்போது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.