நாட்டின் அனைத்து அமைப்புகளையும் பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகின்றன: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஹோஷியார்பூர் (பஞ்சாப்): நாட்டின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றி வருகின்றன என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டம் தண்டா என்ற இடத்தில் அவர் நேற்று காலை நடைபயணம் தொடங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றியுள்ளன. அனைத்து அமைப்புகளுக்கும் அழுத்தம் தரப்படுகிறது.

பத்திரிகைகள் அழுத்தத்தில் உள்ளன. அதிகாரவர்க்கம் அழுத்தத்தில் உள்ளது. தேர்தல் ஆணையம் அழுத்தத்தில் உள்ளது. அவர்கள் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இது ஒரு அரசியல் கட்சிக்கும் இன்னொரு அரசியல் கட்சிக்கும் இடையே நடக்கும் சண்டை அல்ல. அவர்களால் கைப்பற்றப்பட்ட நாட்டின் அமைப்புகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இப்போது சண்டை நடந்து வருகிறது. நாட்டில் இயல்பான ஜனநாயக நடைமுறைகளை காணமுடியவில்லை.

பஞ்சாப் மாநிலம் பஞ்சாபில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்பட்டால் அதை பஞ்சாப் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

கட்டிப்பிடிக்க வந்த நபரால் பரபரப்பு

ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ராகுல் நேற்று நடைபயணம் மேற்கொண்டபோது திடீரென ஒருவர் ஓடிச் சென்று ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்றார். எனினும் அருகில் இருந்த தலைவர்கள் அந்நபரை விலக்கி, அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் கூறும்போது, “அந்த நபர் பாதுகாப்பு சோதனைக்கு பிறகே ராகுல் அருகில் வந்தார். ராகுல் காந்தியை சந்திக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். எனவே திடீரென்று அவரை கட்டிப்பிடித்தார். இதில் பாதுகாப்பு மீறல் எதுவும் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.