சென்னை: மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6 மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரு 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா, அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை பற்றி பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில், தமாகா தலைவர் சென்னையில் கருத்து தெரிவித்தார்.
கலந்தாலோசனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ” இடைத் தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெற்றியை உறுதி செய்ய வேண்டியது கூட்டணி கட்சிகளின் கடமையாக உள்ளது என்பதை நாங்கள் அறிந்து உள்ளோம்” என்று தெரிவித்தார்
இதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் என்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 2 நாட்களுக்கு முன்பு நான் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேசினேன். தேர்தல் அறிவிப்பு வந்த உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தற்போது அதிமுக தலைவர்கள் உடன் கலந்து பேசி இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று கூறிய அவர், அதற்கு ஏற்றவாறு ஒரு சில நாட்களில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யார் என்பது ஒரு சில நாட்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து பேசி அறிவிப்போம்.” இவ்வாறு தமாகா தலைவர் ஜி.கே வாசன் கூறினார்.